1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 12 அக்டோபர் 2024 (10:29 IST)

நவராத்திரியை முன்னிட்டு குஜராத்திகள் தாண்டியா நடனமாடி துர்கா தேவியை வழிபட்டனர்!

நவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் குஜராத்திகள் அவர்கள் வசிக்கும் பகுதியில் துர்கா பூஜை நடத்தி தாண்டியா நடனமாடி துர்கா தேவியை வழிபாடு செய்வது வழக்கம். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம் பாளையம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக குஜராத்தில் இருந்து குடிபெயர்ந்து இங்கேயே வசித்து வரும் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒன்று இணைந்து துர்கா பூஜை நடத்தினர்.
 
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கா தேவி ஒவ்வொரு ரூபம் எடுத்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவதாக ஐதீகம். குஜராத்தை சேர்ந்த பட்டேல் ஒரு கலசம் வைக்கப்பட்டு அதில் ஒன்பது நாட்கள் அணையாத விளக்கு ஏற்றப்பட்டு அதனை துர்கா தேவியாக பாவித்து பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஒன்பதாவது நாளான இன்று தாண்டியா நடனமாடியும், குஜராத் கிராமிய மற்றும் கரபா பாடல்களுக்கு நடனமாடியும், தாண்டியா மேளம் அடித்தும், ஆண்களும் பெண்களும் முதியவர்களும் ஆட்டம் ஆடி கொண்டாடினார்கள். 
 
இது குறித்து ரமேஷ் பட்டேல் என்பவர் கூறும் போது.....
 
நாங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திருச்செங்கோடு பகுதியில் வசித்து வருகிறோம் எங்களது பாரம்பரிய பண்டிகை கொண்டாடும் விதமாக நவராத்திரி துர்கா பூஜையை ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறோம் ஒன்பது நாட்கள் கலசம் வைத்தும் அனையாத விளக்கு வைத்தும் தாண்டியா நடனமாடி அனைவரும் ஒன்றிணைந்து பூஜை செய்வோம். இறுதி நாளான நாளை கும்பத்தை காவிரி ஆற்றில் கரைத்து விடுவோம் என்று கூறினார். இவரை தொடர்ந்து பேசிய நீத்தா பட்டேல் கூறும்போது 30 ஆண்டுகளாக நான் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். எங்களது சந்ததிகள் எங்களைப் பார்த்து இந்த பண்டிகையை தொடர்ந்து கொண்டாடுவார்கள். இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார். 
 
மர வியாபாரம் செய்வதற்காக குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த வந்து குடி பெயர்ந்த பட்டேல் இன குஜராத்திகள் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். விழாவின் இறுதியாக பாதாம் முந்திரி இனிப்பு உள்ளிட்ட பல்வேறு உலர் பருப்பு வகைகளை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில்
பீமஜி பட்டேல்
 நர்சி லால் பட்டேல், மணி லால் பட்டேல், தேவ்ஜி லால் பட்டேல், உள்ளிட்ட பல்வேறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.