சென்னையில் கள்ளநோட்டு பரவ யார் காரணம்? பகீர் தகவல்
- சகாயராஜ்
FILE
சென்னையை அடுத்த வியாசர்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ளநோட்டுகளுடன் சுற்றிய அப்துல்முனாப் (20), வசீம்ராஜா (24), இஸ்மாயில் (24) ஆகியோரை கைது செய்த சென்னை மாநகர போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கள்ளநோட்டு கும்பல் தலைவன் ரபீக் என்பவன் வீட்டில் சோதனை நடத்தி ரூ.5 லட்சத்து 3 ஆயிரம் கள்ள நோட்டுகளை கைப்பற்றினர்.
FILE
இந்த நிலையில் நேற்று முன்தினம் கிழக்கு தாம்பரம் பரத்வாஜ் தெருவில் ரோந்து சென்ற போலீஸ்காரர் பாபு அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். அவரிடம் சோதனை செய்தபோது 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. உடனே சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தியபோது மேற்குவங்க மாநிலம் முசிரிபாத்தை சேர்ந்த அப்துல்ஹமீது (20) என்பது தெரியவந்தது.
FILE
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வட நாட்டவர்கள், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து கட்டிட வேலை மற்றும் ஓட்டல்களில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் சிலரை ஆசை வார்த்தை காட்டி தங்களிடம் சேர்க்கும் கள்ளநோட்டு கும்பல், கள்ளநோட்டுகளை சென்னையில் புழக்கத்தில் விட்டு மாற்றிக்கொடுத்தால் அதற்கு உரிய கமிஷனை வழங்குவது தெரியவந்துள்ளது.
பணத்திற்கு ஆசைபடும் சில தொழிலாளர்கள் கள்ள நோட்டு கும்பலிடம் இந்த வேலைக்கு எளிதில் சேர்ந்து விடுகின்றனர். இதற்காக கொல்கத்தாவில் ஏஜெண்டாக நஜிருல் இஸ்லாம் என்பவன் செயல்பட்டு வருகிறான். இவனிடம் கள்ளநோட்டுகளை கமிஷன் முறையில் பெறும் வாலிபர்கள் இந்தியா முழுவதும் அவற்றை எளிதில் புழக்கத்தில் விடுகின்றனர்.
FILE |
கிழக்கு தாம்பரத்தில் சாலையோர கடையில் அப்துல் அமீது 500 ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து 60 ரூபாய்க்கு செயின் வாங்கி மீதி பணம் பெற்றுள்ளான். போலீசார் கூறிய பின்னர் தான் அந்த வியாபாரிக்கே தான் வாங்கியது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. அந்த அளவிற்கு கள்ள நோட்டுகள் அச்சு அசலாக அச்சடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
