தியாகத்தால் எம்மைக் காத்த மஹாத்மா!
கா. அய்யநாதன்
|
"What difference does it make to the dead, the orphans, and the homeless, whether the mad destruction is wrought under the name of totalitarianism or the holy name of liberty and democracy?"
"There are many causes that I am prepared to die for but no causes that I am prepared to kill for."
“உலக வரலாற்றின் நெடுகிலும் உண்மையும், அன்புமே எப்போதும் வென்றுள்ளன. சில காலங்களில் வீழ்த்த முடியாது என்று கருதப்பட்ட சர்வாதிகாரிகளும், கொலைகாரர்களும் கூட ஆண்டுள்ளனர், ஆனால் அவர்களும் வீழ்ந்தார்கள் என்பதை நான் நம்பிக்கையிழந்த சமயத்திலெல்லாம் நினைத்துப் பார்த்துள்ளேன்.
சர்வாதிகாரத்தினாலோ அல்லது புனிதமான சுதந்திரம் அல்லது ஜனநாயகத்தின் பெயரிலோ நடத்தப்படும் இதயமற்ற அராஜகத்தால் கொல்லப்பட்ட, அனாதையான, வீடிழந்த மக்களுக்கு இவைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளால் என்ன பயன் கிட்டிவிடப்போகிறது?
ஒரு கண்ணிற்கு பழியாக மற்றொரு கண் என்று தொடர்ந்தால் அது இவ்வுலகையே குருடாக்கிவிடும்.
நான் எனது உயிரை அர்ப்பணிப்பதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன, ஆனால் எந்த காரணத்திற்காகவும் நான் கொலை செய்வதற்குத் தயாராக இல்லை.”
அஹிம்சையை போராட்ட வழிமுறையாக்கி, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட நாட்டு மக்கள் அனைவரையும் ஒற்றுமைபடுத்தி, அளப்பரிய தியாகத்தால் விடுதலைப் பெற்ற நாம் இன்று நம்மை ஆண்டுகொள்வதற்கு வலிமையாக காவற்படையிலிருந்து, உலக வல்லரசுகளில் ஒன்று என்று பறைசாற்றிக் கொள்ள நமது பாதுகாப்புப் படைகளுக்காக ஆண்டொன்றுக்கு சற்றேரக்குறைய 1 லட்சம் கோடி செலவு செய்கின்றோம்.
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் உள்ளது என்று கூறினார். கிராம சுயராஜ்யமே நாட்டின் சுயராஜ்யம் என்றார்.
“இந்தியாவை நமது நாட்டின் சில நகரங்களில் அல்ல, கிராமங்களில்தான் காண முடியும் என்று நான் நம்புகின்றேன், இதனைப் பல முறை கூறியுள்ளேன்” என்ற மஹாத்மாவின் வார்த்தைகளை அவருடைய நினைவு நாளில் அரைப் பக்க விளம்பரமாக மறக்காமல் அளித்துள்ளது மத்திய அரசு.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறந்துள்ளனர்.
உயிரோடு இருந்திருந்தால் பொறுத்துக் கொண்டிருந்திருப்பாரா மஹாத்மா காந்தி?
அவர் பாதை வேறு, நமது பாதை வேறு. அவரது சிந்தனை, கொள்கை என்று எதுவும் நாம் மேற்கொண்டு வரும் நவீன வாழ்க்கைக்கு ஒத்துவராது.
அவர் அஹிம்சையை கடைபிடிக்கச் சொன்னார். வெறுப்புணர்ச்சி கூடாது என்றார். மத, சாதிய பாகுபாடுகளை விலக்கச் சொன்னார்.
நாம் நம்மைப் பற்றியே எப்போதும் சிந்திப்பவர்கள். நமது நாட்டின் ‘பலத்தில்’ பெருமை கொள்பவர்கள். நமது அந்த அடையாளங்களை பத்திரமாகப் பாதுகாத்து, மத, சாதிய பாகுபாடுகளை ஆழமாக சிந்தித்து அதனடிப்படையில் சமூக, அரசியல் முடிவுகளை மேற்கொள்பவர்கள். ஏனென்றால் ‘‘முன்னேற்றம்” அவசியமல்லவா?
அவர் எங்களுக்கு ஒரு அடையாளம் அவ்வளவே. எப்பொழுதெல்லாம் தேவையோ, அப்பொழுது அவரைத் தூக்கிப் பிடிப்போம். அதைத் தாண்டி எங்களது இன்றைய வாழ்க்கைக்கு அவர் தேவையற்றவர்.
இதையெல்லாம் அறியாதவரா மஹாத்மா காந்தி? பிரிவினைக்கு முன்னர், அதனை தவிர்த்துவிட அவர் கடுமையாக போராடிக் கொண்டிருந்த நேரத்தில், ஜவஹர்லால் நேருவும், வல்லபாய் பட்டேலும் காந்தியை சந்தித்துப் பேசினர். பிரிவினையைத் தவிர வேறு வழியில்லை என்று வாதிட்டனர். காந்தி புரிந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பிற்குப் பின்னர், சோகத்துடன் வெளியில் வந்த மஹாத்மா காந்தி, தன்னை எதிர்கொண்ட செய்தியாளர்களிடம் ஒன்றைக் கூறினார்:
|
சத்யமேவ ஜயதே!
