செவ்வாய், 22 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (09:12 IST)

வெடிக்குண்டு மிரட்டல் விடுப்பவர்கள் விமானத்தில் பயணிக்க நிரந்தர தடை? - மத்திய அரசு ஆலோசனை!

Flight

சமீபமாக இந்தியாவில் விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல் அதிகரித்து வரும் நிலையில் மிரட்டல் விடுப்போருக்கு தண்டனை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

இந்தியாவின் முக்கிய நகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள் வரை பல உள்நாட்டு, பன்னாட்டு விமானங்களின் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களிலும் தொடர்ந்து விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுக்கப்படுவதும், சோதனையில் அது புரளி என தெரிய வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு இதுபோன்ற போலி மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி விமானத்திற்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் சமூக வலைதளம் மூலமாக வெடிக்குண்டு மிரட்டல் விடுத்த சம்பவமும் நடந்தது.

 

இதனால் இதுபோன்ற வெடிக்குண்டு மிரட்டல் விடுபவர்கள் மீது மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்த மாற்றங்களை ஏற்படுத்த ஆலோசித்து வருவதாக மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற மிரட்டல் விடுப்பவர்கள் விமானத்தில் பயணிக்க வாழ்நாள் தடை விதிப்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K