1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 12 மார்ச் 2025 (10:02 IST)

மீண்டுமொரு முறை அது நடந்தால் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும் – ஜாம்பவான் பவுலர் எச்சரிக்கை!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார். இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு எதிர்கால கேப்டன் தான்தான் என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். ஆனால் அவர் அடிக்கடி காயமடைவது அவரால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

அண்மையில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரின் இறுதிப் போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் பாதியிலேயே வெளியேறினார். இந்நிலையில் அவர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாகக் குணமாகததால், நசாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் விளையாடவில்லை. இந்நிலையில் இம்மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் தொடர் முதல் இரண்டு வாரங்கள் அவர் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் நியுசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் பும்ராவின் காயம் பற்றி தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் “ அவர் ஸ்கேனுக்கு சென்ற போதே அவருக்கு முதுகுப் பகுதியில் பிரச்சனை இருக்கும் என்று நினைத்தேன். இப்போது அவர் குணமாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவருக்கு மீண்டும் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டால் அத்துடன் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும். ஏனென்றால் ஒரே இடத்தில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்தால் அதில் இருந்து மீண்டு வருவது கடினம். அதனால் பிசிசிஐ பும்ராவை சரியாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.