வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 10 ஆகஸ்ட் 2024 (14:43 IST)

கேப்டனாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் அஸ்வினின் கனவு… தமிழக வீரர் பகிர்ந்த தகவல்!

கடந்த சில வாரங்களாக நடந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி முதல் முதலாக கோப்பையைக் கைப்பற்றியது. இந்நிலையில் அவர் பற்றி பேசியுள்ள மற்றொரு தமிழக வீரரான பாபா அபாரஜித் “நான் எப்போதுமே அவரைக் கேப்டனாகப் பார்க்க ஆசைப்பட்டேன். அவர் ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட்டர்.  அவர் எப்போதுமே ஒரு பேட்டர் அல்லது பவுலர் என்று மட்டும் யோசிக்காமல் அதையும் தாண்டி யோசிக்கக் கூடியவர். அவருக்கு எல்லாவிதமான தலைமைக் குணங்களும் உள்ளன.  அவருக்கு எப்போதும் கேப்டனாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

அஸ்வின் தமிழ்நாடு உருவாக்கிய மிகச்சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவர். டெஸ்ட் போட்டிகளில் கும்ப்ளேவுக்கு அடுத்த விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆனால் அவர் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் கடந்த சில ஆண்டுகளாக விளையாட அனுமதிக்கவில்லை.

ஐபிஎல் தொடரிலும் ஆரம்பத்தில் சென்னை அணிக்காக விளையாடிய அவர், அதன் பின்னர் பல அணிகளுக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு ஏலத்தில் அவர் சி எஸ் கே அணிக்கு மீண்டும் ஏலத்தில் எடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.