1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (13:08 IST)

பெரும்பான்மை இழந்த அரசு... நேற்று பதவியேற்ற நிதியமைச்சர் இன்று ராஜினாமா!

மகிந்த ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் இலங்கை நிதியமைச்சராக நேற்று பொறுப்பேற்ற அலி சப்ரி பதவி விலகல். 

 
இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் ஆளும் ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு வீதிகளில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இலங்கையில் ஆளும் எஸ்.எல்.பி.பி. கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. 
 
இலங்கையில் 40-க்கும் மேற்பட்ட ஆளும், கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தனித்து செயல்பட முடிவெடுத்துள்ளனர். 225 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 113 பேர் ஆதரவு தேவைப்படும் நிலையில் 103 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது என்பதால் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது மகிந்த ராஜபக்சே அரசு. 
 
முன்னதாக நேற்று ராஜபக்‌ஷே தவிர்த்து பிற அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில் உடனடியாக புதிய அமைச்சர்கள் பதவி நியமனம் செய்யப்பட்டனர். தற்போது மகிந்த ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் இலங்கை நிதியமைச்சராக நேற்று பொறுப்பேற்ற அலி சப்ரி பதவி விலகினார். இலங்கை நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் திடீர் பதவி விலகியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.