செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 21 ஜனவரி 2020 (18:14 IST)

பிரமிடு மீது ஏறிய இன்ஸ்டா பிரபலம்; சிறைப்படுத்திய போலீஸார்

எகிப்து நாட்டில் உலக பாரம்பரிய தளமான கிஸா பிரமிடு மீது ஏறிய குற்றத்திற்காக இன்ஸ்டாகிராம் பிரபலமான விட்டலி கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

உலகத்தின் 7 அதிசயங்களில் ஒன்றானது எகிப்து பிரமிடுகள். இதனை காண்பதற்கு பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆன ரஷ்யாவைச் சேர்ந்த விட்டலி, கிஸா பிரமிடுகள் வளாகத்தில் உள்ள ஒரு பிரமீடின் மீது ஏறியுள்ளார். அவர் அணிந்திருந்த டி-சர்ட்டில் ”Stop war, help Australia” (போரை நிறுத்துங்கள், ஆஸ்திரேலியாவை காப்பாற்றுங்கள்) என எழுதியிருந்தது. அவர் பிரமிடிலிருந்து கீழே இறங்கி வந்த போது, அவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து ஐந்து நாட்கள் சிறையில் வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் விட்டலி தனது இன்ஸ்டா பக்கத்தில், தான் பிரமீடின் மேல் ஏறிய புகைப்படங்களையும் வீடியோவையும் இணைத்துள்ளார். அதில், “நான் பலமுறை சிறையில் இருந்துள்ளேன். ஆனால் இந்த 5 நாட்கள் எகிப்து சிறையில் இருந்தது மிகவும் மோசமனது. அங்கே நான் பயங்கரமான விஷயங்களை கண்டேன். இதனை வேறு யாரும் செய்ய நான் விரும்பவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது வீடியோ பதிவில், “எகிப்து நாட்டை நான் விரும்புகிறேன். இத்தேசத்தை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பற்றியும், உலக நாடுகளிடையேயான போர் ஆகியவாற்றை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே விரும்புகிறேன். போரை நிறுத்துங்கள், காட்டுத்தீ பிரச்சனைக்கு நன்கொடை வழங்குங்கள்” என கூறியுள்ளார்.

”கிசா பிரமிட் வளாகம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம், பண்டைய ஏழு அதிசயங்களில் ஒன்றாகும். இவைகளில் ஏறுவது சட்டவிரோதமானது” என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.