1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 24 பிப்ரவரி 2024 (16:17 IST)

"நான் மலாலா யூசுப் இல்லை".! காஷ்மீரில் பாதுகாப்பாக இருக்கிறேன்.! யானா மீர்..

Yana Mir
மலாலா யூசுப் பாகிஸ்தானில் இருந்ததைப்போல் அல்லாமல், காஷ்மீரில் தாம் பாதுகாப்பாக இருப்பதாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் சமூக ஆர்வலர் யானா மீர் பேசியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
ஜம்மு மற்றும் காஷ்மீர் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான யானா மீர், இங்கிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் இங்கிலாந்தில் ஜம்மு காஷ்மீர் கல்வி மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவருக்கு இங்கிலாந்து எம்.பி தெரசா வில்லியர்ஸ் பன்முகத்தன்மைக்கான தூதர் விருது வழங்கி கெளரவித்தார்.
 
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய யானா மீர், "நான் மலாலா யூசுப் இல்லை என்றார். ஏனென்றால், இந்தியாவின் ஒருபகுதியாக உள்ள என்னுடைய சொந்த ஊரான காஷ்மீரில் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறேன் என்று பேசினார். நான் என்னுடைய சொந்த நிலத்தில் இருந்து எங்கேயும் ஓடிவிடமாட்டேன் என்று கூறிய அவர், உங்களுடைய நாட்டில் அடைக்கலம் கேட்கவும் மாட்டேன் எனத் தெரிவித்தார்
 
காஷ்மீர் ஒடுக்கப்பட்டுள்ளதாக மலாலா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீர் மீது அடக்குமுறை கதைகள் புனையப்படுகின்றன என்று குற்றம்சாட்டினார்.


மேலும் மதத்தின் அடிப்படையில் இந்தியர்களை பிரிவினைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றார். இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் யானா மீர் வேண்டுகோள் விடுத்தார்.