1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (12:37 IST)

அமெரிக்காவில் பற்றி எரிந்த வீடு: கேஷுவலாக குடும்பத்தை காப்பாற்றிய குட்டி பையன்!

கோப்புப்படம்
அமெரிக்காவில் வீடு ஒன்றில் திடீரென தீப்பற்றிய நிலையில் சாதுர்யமாக செயல்பட்டு குடும்பத்தினர் அனைவரையும் சிறுவன் ஒருவன் காப்பாற்றிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த சிறுவன் நோவ் வுட்ஸ். தனது தாய், தந்தையர் மற்றும் உறவினர்கள் உட்பட 8 பேர் கொண்ட வீட்டில் வசித்து வரும் 5 வயதான நோவ் வுட்ஸுக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். வழக்கம்போல இரவு எல்லாரும் தூங்க சென்ற நேரத்தில் வீட்டில் தீப்பிடித்துள்ளது. தீப்பிடித்து விட்டதை முன்னதாகவே அறிந்த நோவ் உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளான்.

உடனடியாக தனது தங்கையையும், செல்ல நாய்க் குட்டியையும் ஜன்னல் வழியாக வெளியேற்றியுள்ளான். பிறகு பக்கத்து அறைக்கு சென்று தனது உறவினர்களை எழுப்பி உஷார் செய்துள்ளான். உடனடியாக அவர்கள் நோவ் வுட்ஸுடன் வீட்டை விட்டு வெளியேறி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சிறுவன் நோவ் வுட்ஸ் தீ பற்றியதும் நிதானமாக செயல்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இதை பாராட்டி தீயணைப்பு துறையினர் சிறுவனுக்கு சிறப்பு விருதை அளித்துள்ளனர்.