வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. மகளிர் தினம்
Written By Sasikala

மகளிருக்கான உரிமைகள் அவர்களுக்கு முழுமையாக கிடைத்துவிட்டதா...?

மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாக 1857 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு அறிமுகமாகி வருகின்றது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதும்தான் இத்தினத்தின் பிரதான இலக்காகும்.
பெண்ணை சக்தியின் அம்சமாகப் பார்க்கும் நம் மண்ணில்தான் அவள் போகப் பொருளாக மட்டும் பார்க்கப்படும் கொடுமையும் நடந்துக்கொண்டிருக்கிறது. ஒரு  பெண்ணின் மூலம் தோன்றும் ஒரு ஆண், அப்பெண்ணை வெறும் உடலாக மட்டும் பார்க்கத் துணிவது மனிதமற்ற செயல். ஆயினும் தடைக்கற்கள் அனைத்தையும்  படிக்கற்களாகக் கடந்து, வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருக்கும் பெண்கள் அதிகம் உள்ளனர்.
 
பெண்களுக்கான சம உரிமை என்பது, சில காலம் முன்பு வரை திருமணம் ஆன பெண்கள் பணிக்குச் செல்வது என்பதே அரிதாகவே இருந்தது. ஆனால் இன்றைய  பொருளாதார நிலையில் திருமணமாகாத பெண்கள் மட்டும் பணிக்குச் சென்று கொண்டிருந்த காலம் மலையேறி, தற்போது அனைத்து பெண்களும் வேலைக்கு  போகும் நிலை உள்ளது. குடும்ப வளர்ச்சி, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற காரணங்களுக்காக திருமணமான பெண்களும்  வேலைக்குப்போக வேண்டிய சூழல் உள்ளது.
 
பெண்கள் பெரும்பாலும் கல்வி, வாழும் சூழ்நிலைக்கேற்றவாறு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளும் பரவலாக இருக்கின்றன. சில  பெண்கள் குழுமங்களாகச் சேர்ந்து அதற்கான வாய்ப்புகளைத் தாங்களே உருவாக்கும் வல்லமையும் பெற்றிருக்கிறார்கள். 
 
ஒரு காலத்தில் தனித்து இயங்கவே முடியாத நிலையில் இருந்தவர்கள் இன்று கடைகளுக்கு செல்வதிலிருந்து விண்வெளி பயணம் மேற்கொள்வது வரை பல  துறைகளிலும் சாதித்து வருகின்றனர் என்றாலும் ஆங்காங்கே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அச்சமூட்டுவதாகவே உள்ளது. இவை சிறு  குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் இன்றைய அளவும் இருக்கிறது. ஆதாலால் காலத்திற்கேற்ற சில மாற்றங்கள் மேற்கொள்ளவேண்டிய அவசியமும் ஏற்படத்தான் செய்கிறது. அதனை உணர்ந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதும் அவசியமாகிறது.