ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தியானம் செய்யும் முறையும் அதன் பலன்களும்...!!

தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். காலை 5 அல்லது 6 மணி, மாலை 6:30 அல்லது 7:30 என நேரத்தை  தேர்ந்தெடுத்து, முடிந்தவரை அதே நேரத்தில் தியானம் செய்ய முயற்சி செய்யவும்.

தேர்ந்தெடுக்கும் இடத்தில் ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். கைகள் மடி மீது வைத்து, கண்களை மூடி கொள்ளவும்.
 
சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்த உதவும்.
 
இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்து செல்லவும். இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகி பிரார்த்திக்கவும். நல்ல உடல், அமைதியான  மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றிற்காக பிராத்திக்கவும்.
 
ஐந்து, பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.
 
பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். குறைந்த பட்சம் 100 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 100 இன்  மடங்காக இருக்க வேண்டும். தியாத்திற்கு பிறகு உடனடியாக எழுந்திருக்க வேண்டாம். தொடர்ந்து சிறிது நேரம் அமர்ந்து மனதுக்கு அமைதி தரும் ஆன்மீக  புத்தகங்களை படியுங்கள்.
பலன்கள்:
 
மனதில் தேவையில்லாத எண்ணங்களை நம்மால் வெளியேற்ற முடியும். எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதில் முழுமனதுடன் ஈடுபடமுடியும். ஆழ்ந்து  கவனிப்பது, மற்றவர்கள் கூறுவதை உள்வாங்குவது போன்ற திறமைகளை தியானத்தின் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும். 
 
எதிர்மறையான ஆற்றல் உங்களிடம் இருந்தாலோ அல்லது அப்படிப்பட்டவர்களிடம் பழகினாலோ உங்களது மூளையின் செயல்திறன் எதிர்மறையாக மாறிவிடும்.  அப்படி எதிர்மறை ஆற்றல் கொண்டவர்களை தியானம் செய்வதன் மூலம் சரி செய்து விடலாம்.
 
உங்களின் தன்னம்பிக்கை திறனானது அதிகரித்துவிடும். உங்களது வாழ்விற்கு எது நல்லது எது கெட்டது என்பதை நீங்களே ஆராய்ந்து முடிவெடுக்கும் திறமையை  அடைவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களில் இருந்தும் தியானத்தின் மூலம்  விடுபடலாம்.