ஏன் இப்படி அழுது வடிகிறார்… நாங்கள்தானே உங்கள் படத்தைக் கொண்டாடினோம்- பிரேம்குமாருக்கு விமர்சகர்கள் பதில்!
96 என்ற மென்சோகப் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் அடுத்து கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் அவரின் முந்தைய படம் போல நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் மெய்யழகன் திரைப்படம் சில விமர்சனங்களையும் சந்தித்து சராசரியான வெற்றியைப் பெற்றது.
படம் ரிலீஸான போதே படம் தேவையில்லாமல் நிறைய விஷயங்களைப் பேசி தொய்வை ஏற்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதன் நீளம் குறைக்கப்பட்டது. ஆனால் அந்த விமர்சனங்களை இப்போது வரை பிரேம்குமார் ஏற்றுக்கொள்ளவில்லை.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் “மெய்யழகன் படத்தை மலையாளத்தில் எடுத்திருந்தால் அந்த படத்தைக் கொண்டாடியிருப்பார்கள். தமிழில் எடுத்ததுதான் தவறு என என்னிடமே சிலர் சொன்னார்கள். பைரசியை விட ரிவ்யூவர்களையே நான் அச்சுறுத்தலாகப் பார்க்கிறேன். அவர்களுக்கு மன ரீதியாக பிரச்சனை உள்ளது” எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு பல விமர்சகர்கள் பிரேம்குமாருக்குக் காட்டமாக பதிலளிக்கத் தொடங்கியுள்ளனர்.
பிரேம்குமாரின் முதல் படமாக 96 பல பிரச்சனைகளை சந்தித்து எந்த ப்ரமோஷனும் இல்லாமல் வெளியானது. ஆனால் அதன் பிறகு விமர்சகர்கள் அந்த படத்தைக் கொண்டாடி மக்களுக்கு சொன்னதன் மூலமே அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அப்பொது விமர்சகர்கள் செய்தது சரி. ஆனால் உங்கள் படத்தை விமர்சித்தால் மன ரீதியான பிரச்சனையா எனக் கேட்டு கொந்தளித்து வருகின்றனர்.