வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (16:44 IST)

மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக்கான விவகாரம்…. நஷ்ட ஈடு கோரும் தயாரிப்பாளர்!

மாஸ்டர் படத்தின் காட்சிகள் எல்லாம் ஒரு ப்ரோமோஷன் கம்பெனியின் மூலமாகதான் வெளியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிறுவனத்திடம் மாஸ்டர் தயாரிப்பாளர் நஷ்ட ஈடு கேட்டுள்ளாராம்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் நேற்று திடீரென 'மாஸ்டர்’ படத்தின் ஒருசில காட்சிகள் இணையத்தில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். தயாரிப்பாளர் பிரிட்டோ, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் டுவிட்டர் மூலம் இணையத்தில் பரவி வரும் காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனாலும் அதற்குள் காட்சிகள் பரவி விட்டன.

இந்த நிலையில் தற்போது 'மாஸ்டர்’ படத்தை இணையத்தில் கசிய விட்டவர் குறித்த தகவல் தெரியவந்ததாகவும் அந்த நபர் ஒரு தனியார் டிஜிட்டல் சினிமா நிறுவனத்தின் ஊழியர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அந்த நிறுவனத்திடம் ப்ரமோஷனுக்காக படத்தினை தயாரிப்பாளர் கொடுத்திருந்த நிலையில் அங்கு பணிபுரிந்த ஊழியர் துண்டு துண்டாக காட்சிகளை எடுத்து வெளியிட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மாஸ்டர் படக்குழுவினர் அந்த நிறுவனத்திடம் நடந்த தவறுக்காக நஷ்ட ஈடு தொகை கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.