1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (11:25 IST)

மணிரத்னத்துடன் மோதும் சௌந்தர்யா ரஜினிகாந்த் – பொன்னியின் செல்வன் கடந்து வந்த பாதை !

தமிழின் முக்கியமான இயக்குனர்களுள் ஒருவரான மணிரத்னம் தமிழின் செவ்வியல் நாவல்களுள் ஒன்றான பொன்னியின் செல்வனைப் படமாக்கும் முயற்சியில் இருக்க ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினியும் அதை வெப் சீரிஸாக எடுக்க திட்டமிட்டு வருகிறார்.

பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக் விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் இருக்கும். இப்போது கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது.

இந்த நாவலைப் படமாக்க தமிழ் சினிமா ஆளுமைகளில் பலர் முயன்று தோற்றுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் இதைப் படமாக்க முயன்று  இரண்டு முறைத் தோற்றுள்ளார். தான் பிரபலக் கதாநாயகனாக இருந்த போது ஒருமுறை இந்த படத்திற்கான வேலைகளைத் தொடங்கி போஸ்டர் எல்லாம் கூட வெளியிட்டார். ஆனால் என்ன காரணத்தினாலோ படம் தொடங்கவில்லை, அதன் பின்னர் தான் முதல்வரானப் பின்பு கமல்ஹாசனை கதாநாயகனாக நடிக்க வைத்து தான் ஒருக் குணச்சித்திரப் பாத்திரத்தில் நடிக்க முடுவு செய்தார். ஆனால் அந்த எண்ணமும் நிறைவேறவில்லை.

பின்பு கமல்ஹாசன் எடுக்க நினைத்து அவரும் கைவிட்டார். பின்னர் மணிரத்னம் பொன்னியின் செல்வனைக் கையில் எடுத்து விஜய், மகேஷ் பாபு, சூர்யா, விக்ரம் உள்ளிட்டோரிடம் கால்ஷீட் வரை வாங்கி வைத்திருந்தார். ஆனால் நடிகர்களின் கால்ஷீட் குழப்பம் மற்றும் பட்ஜெட் பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இம்முறை எல்லாம் கூடி வந்து படவேலைகளை மும்முரமாக ஆரம்பித்து ஸ்டோரி போர்டு வேலைகளில் இறங்கியுள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், அமிதாப் பச்சன், ஐஷ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க இருப்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் திடிரென ரஜினி மகள் சௌந்தர்யா இப்போது தான் பொன்னியின் செல்வன் நாவலை வெப் சீரிஸாக எடுக்கப்போவதாகவும், அதை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் உருவாக இருப்பதாகவும் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த சீரிஸை சௌந்தர்யோவோடு இணந்து எம். எக்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஒரே நேரத்தில் இருவர் ஒரே நாவலைப் படமாக்க இருப்பதால் கோலிவுட்டில் பயங்கர எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.