தமிழகத்தில் மழைக்கு நீண்ட இடைவெளி: சென்னையில் வெயில்!
கடந்த வார இறுதியில் தென் மாவட்டங்களில் தொடங்கி, பின்னர் வட மாவட்டங்கள் வரை பெய்த கனமழையால் தமிழகம் முழுவதும் நீர்வரத்து அதிகரித்தது. வங்க கடலில் உருவான 'டிட்வா' புயல் காரணமாக பரவலாக நல்ல மழை பெய்து, வடகிழக்கு பருவமழை குறித்த அச்சத்தை போக்கியது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாள்கள் கனமழை பெய்தது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை நிலவரத்தின்படி, தமிழகத்தில் மழைக்கு நீண்ட இடைவெளி விடப்பட்டுள்ளது.
சென்னை உட்பட ஒட்டுமொத்த வட தமிழக மாவட்டங்களிலும் இன்று சூரிய வெளிச்சம் வந்துள்ளது.
பெரும்பாலான தமிழக பகுதிகளில் இன்று மழைக்கு முற்றிலும் விடுமுறை அளிக்கப்பட்டு, அனைத்து மேகங்களும் விலகி சென்றுள்ளன.
சென்னைக்கு அடுத்த மழை வர, டிசம்பர் 16 அல்லது 17 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், டெல்டா பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதனால், தமிழகம் முழுவதும் தற்போது மழைக்கு பெரிய இடைவெளி கிடைத்துள்ளது.
Edited by Mahendran