புதன், 18 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (11:14 IST)

அந்த ரெண்டு வார்த்தை இவ்ளோ பெருசா ஹிட்டாகும்னு நெனைக்கல – ராயன் பாடல் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி!

நடிகர் தனுஷ் நடித்து, இயக்கியுள்ள அவரின் 50 ஆவது படமான ராயன் கடந்த வாரம் வெளியான நிலையில் நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

படம் வெளியாகி முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 12.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது வழக்கமாக தனுஷ் படங்கள் செய்யும் கலெக்‌ஷனை விட அதிகம். அடுத்தடுத்த விடுமுறை நாட்களிலும் இந்த படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் முதல் மூன்று நாட்களில் இந்த படத்தின் கலெக்‌ஷன் 70 கோடி ரூபாய் அளவுக்கு ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு ஏ ஆர் ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் ஒரு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ‘அடங்காத அசுரன் ‘ பாடல் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ‘உசுரே நீதானே’ என்ற வரிகளை ரஹ்மான் பாடும்போது தியேட்டரில் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி மகிழ்கின்றனர்.

இந்த பாடல் உருவாக்கம் குறித்து தனுஷ் நெகிழ்ந்துள்ளார். அதில் “உசுரே நீதானே என்ற இந்த இரண்டு எளிமையான வரிகளை எழுதும்போது , ஏ ஆர் ரஹ்மான் இசையில் அது லட்சக்கணக்கான இதயங்களில் இப்படி எதிரொலிக்கும் என நான் நினைக்கவில்லை.” எனக் கூறியுள்ளார்.