ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (08:23 IST)

தயாரிப்பாளர்கள் என்னை ஏமாற்றிவிட்டனர்… அக்‌ஷய் குமார் புலம்பல்!

கடந்த பல ஆண்டுகளாக பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய்குமார். ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக பல கருத்துகளைப் பேசி வரும் நிலையில் அவர் நடித்த படங்கள் எதுவும் கடந்த சில ஆண்டுகளாக வெற்றி பெறவேயில்லை. ஆனாலும் அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சர்பிரா’ என்ற படத்தில் நடித்தார். இது தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சூரரைப் போற்று திரைப்படத்தின் ரீமேக். ஆனாலும் இந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் அக்‌ஷய் குமார் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பல தயாரிப்பாளர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார். அதில் “ஒவ்வொரு படத்துக்குப் பின்பும் கடினமான உழைப்பு இருக்கிறது. ஒரு படம் தோல்வி அடையும் போது இதயம் வலிக்கிறது. ஆனாலும் அதில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள பாடம் உள்ளது. தோல்விதான் வெற்றியின் மதிப்பைக் கற்றுத் தருகிறது.

அதிர்ஷ்டவசமாக என்னுடைய திரைப்பயணத்தின் தொடக்கத்திலேயே நான் வெற்றி தோல்வியைக் கையாளக் கற்றுக்கொண்டேன். சில தயாரிப்பாளர்கள் எனக்குத் தரவேண்டிய பணத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டனர்.  என்னை ஏமாற்றுபவர்களிடம் அதன் பிறகு நான் பேசுவதில்லை” எனக் கூறியுள்ளார்.