1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 23 டிசம்பர் 2023 (14:15 IST)

கே.பாலச்சந்தரின் நினைவு நாள்- கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பதிவு

''என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை வகிக்கும் என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுகின்றன’’ என்று  நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என அழைக்கப்படுபவர் கே. பாலச்சந்தர். இவர் கடந்த 1964 ஆம் ஆண்டு திரைக்கதை எழுத்தாளராக தன் திரைப்பட பயணத்தை தொடங்கிய நிலையில், 1965 ஆம் ஆண்டு நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்திய சினிமா நட்சத்திரங்களால் பெரிய மரியாதையுடன் பார்க்கப்பட்ட அவர், ரஜினி, கமல்ஹாசன் , பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலருக்கு குருவாக அறியப்படுகிறார்.

தன் திரையுலக வாழ்வில் 9 தேசிய விருதுகள்,100க்கும் மேற்பட்ட  படங்களை இயக்கி  எல்லோராலும் போற்றப்படுகிற  அவருக்கு  உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி அவர் மறைந்தார். அவரது நினைவு தினத்தை முன்னிட்டு சினிமாத்துறையினர் அவருக்கு  நினைவுதினத்தை அனுசரித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தன் வலைதள  பக்கத்தில்,

‘’அசாத்தியமான எண்ணிக்கையில் திரைப்படங்களை இயக்கிய திறமையாளர்; எத்தனையோ நடிப்புக் கலைஞர்களைத் திரைக்குத் தந்த திண்மையாளர்; தனக்கென்றிருந்த பாணியிலிருந்து தவறாமல் படைப்புகளைக் கொடுத்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

இன்று அவரது நினைவு நாள். என் மனதில் தந்தைக்கு நிகரான இடத்தை வகிக்கும் என் ஆசிரியருடனான தருணங்கள் நினைவில் எழுகின்றன’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.