1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (14:51 IST)

விருத்திமான் சஹாவை மிரட்டிய பத்திரிக்கையாளர்… மூத்த வீரர்கள் ஆதரவு!

இந்திய டெஸ்ட் அணியின் கீப்பர் விருத்திமான் சஹா தான் ஒரு பத்திரிக்கையாளரால் மிரட்டப்பட்டதாக அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்திமான் சஹா தோனியின் ஓய்வுக்குப் பின்னர் இந்திய டெஸ்ட் அணிக்கு விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். ரிஷப் பண்ட்டின் வருகைக்குப் பிறகு அவர் மாற்று விக்கெட் கீப்பராக அணிக்குள் இருந்தார். ஆனாலும் அவருக்கு அதிகளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது அவர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்த கருத்துகள் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் தன்னை ஒரு பத்திரிக்கையாளர் வாட்ஸ் ஆப் மூலமாக மிரட்டியதாக ஸ்க்ரீன் ஷாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தோடு ‘இந்திய அணிக்காக எனது பங்களிப்புகளுக்குப் பிறகு நான் பெறுவது இதுதான். அதுவும் ஒரு பத்திரிக்கையாளர் என்று சொலல்ப்படுபவரால்’ என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரின் இந்த பதிவு இப்போது அவருக்கு ஆதரவை பெற்றுத் தந்துள்ளது. இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், ஹர்பஜன் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் அவருக்கு ஆதரவாக குரல்கொடுத்து மிரட்டல் விடுத்த அந்த நபர் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.