வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (13:36 IST)

குருனால் பாண்ட்யா அபார பவுலிங் – 158 ரன்களில் சுருண்டது நியுசிலாந்து

நியுசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டியில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 158 ரன்களை சேர்த்துள்ளது.

இன்று தொடங்கிய நியுசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் போட்டியைப் போல அல்லாமல் இந்த போட்டியில் இந்தியப் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததால் நியுசிலாந்து அணி அதிரடியாக விளையாடாமல் நிதானமாக விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களான செய்பெர்ட் மற்றும் காலின் மன்ரோ ஆகிய இருவரும் 12 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அதையடுத்து வந்த கேன் வில்லியம்சன் 17 ரன்களிலும் மிட்செல் 1 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேற நியுசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் சேர்த்துத் தடுமாறியது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ராஸ் டெய்லர் மற்றும் காலின் டி கிராண்ட்ஹோம் ஆகிய இருவ்ரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி அதிரடியாக 5 ஆவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர் 42 ரன்களில் ஆவுட் ஆகி வெளியேற கிராண்ட்ஹோம் 28 பந்துகளில் 50 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.

இதனால் நியுசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில்8 விக்கெட்களை இழந்து 158 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய குருனால் பாண்ட்யா 4 ஒவர்களில் 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து  3 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார். கலீல் அகமது 2 விக்கெட்களையும் சஹால் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

159 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தும் இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்களை எடுத்துள்ளது.