வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த ஆடி அமாவாசை!!

நாளை ஆடி அமாவாசை தினம் கொண்டாடப்படுகிறது. அமாவாசை என்பது இந்துக்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் தொடங்க உகந்த நாள்  என கருதப்படுகிறது. அமாவாசை அன்று முழுவதும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் சந்திரன் இன்றிலிருந்து வளர்வதாக ஒரு ஐதீகம். அதனால்தான் இதை வளர்பிறை என சொல்லப்படுகிறது.
ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். அதுபோல் நாம் உண்ணும் உணவுக்கு ஆதாரமாக விளங்கும் அன்னபூரணிக்கு உகந்த மாதமும் இந்த  ஆடி மாதமே. இந்த மாதத்தில் அம்பிகை பிறந்ததால், அம்மன் மாதம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. 
 
இந்து மதத்தை சேர்ந்தவர்கள், மறைந்த தங்களது பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் வழிபடுவது வழக்கம். இதில், ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் பிரசித்தி பெற்றது. முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள்  உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். இன்று தை அமாவாசை. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளாகும்.
ஆடி மாதம் சுப காரியங்கள் தவிர்க்கப்படும் மாதம். என்றாலும், ஆடி அமாவாசைக்குப் பிறகு சுப காரியங்கள் செய்யலாம் என ஜோதிட நூல்கள்  கூறுகின்றன. ஏனெனில், சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாதத்தைக் கணக்கிடும்போது, ஆடி அமாவாசையோடு ஆஷாட  மாதம் முடிந்து, அதன்பிறகு மங்களகரமான காலமாகக் கூறப்படுகிறது. அப்போது நல்ல காரியங்களைச் செய்யலாம்.
 
பித்ருக்களான முன்னோர்களில் சவுமியர், பர்ஹிஷதர், அக்னிஷ் வர்த்தர் என்ற மூன்று பிரிவினர் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.  பித்ருக்கள் வானவிளிம்பில் ஒன்றுகூடி இருக்கும் போது, அவர்களுக்குரிய நீர்க்கடனை அவர்களது வம்சத்தினர் செலுத்துவதால் அவர்களது  நல்வாழ்த்துகள் கிட்டும். அதனால் ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு நீர்க்கடன் அளிப்பது மிகவும் அவசியம் என்று சாஸ்திரங்கள்  வலியுறுத்துகின்றன. 
 
ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளான கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரைகளில் அமைந்துள்ள கோவில்களில் நம்முடன் வாழ்ந்து  முக்தியடைந்த நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு வேதவிற்பன்னர் உதவியுடன் நீத்தார்களுக்கான பிதுர்பூஜை செய்தால், எடுத்த  காரியம் தடையின்றி நடைபெறும்; குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.