வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள் எவை தெரியுமா....?

ஒருமுறை சுக முனிவர் என்பவர் ஸ்ரீமகாலட்சுமி தேவியிடம், “செல்வம் உட்பட சகல வளங்களையும் அருளும் தேவியே! பக்தர்களின்  வீடுகளில் தாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டுமெனில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?” என்று கனிவுடன் கேட்டார்.
அதற்கு ஸ்ரீ மகாலட்சுமி “வெள்ளை மாடப் புறாக்கள் வாழும் இடம், அடக்கமும் அமைதியும் கொண்ட பெண்கள் வாழும் இல்லம்,  நவதானியங்கள் நிறைந்துள்ள இடம், தானம் செய்து எல்லோருடனும் பகிர்ந்து உண்டு வாழும் நல்ல மனிதர்கள், இனிமையான சொற்களைப்  பேசுபவர்கள், பணிவு நிறைந்தவர்கள், நாவை அடக்கியவர்கள், சாப்பிடுவதிலேயே நீண்ட நேரத்தைக் கழிக்காதவர்கள், பெண்களை தெய்வமாக மதிப்பவர்கள் போன்றவை அனைத்திலும் நான் நித்திய வாசம் செய்வேன்.
மேலும் சங்கு, நெல்லிக்காய், கோமியம், தாமரை மலர், வெண்மை நிற உடைகள், சுத்தமான ஆடைகள், சுத்தமான இல்லங்கள் இவற்றிலும் நான் வாசம் செய்கிறேன். தூய உள்ளம் கொண்டு பரிசுத்தமாக இருப்போர் அனைவரிடத்திலும் நான் நிச்சயம் இருப்பேன்! என்று சுக  முனிவருக்குப் பதில் கூறினாள் ஸ்ரீமகாலட்சுமி.
 
நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள். பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம், பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது. குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று  கூறுவார்கள்.
 
துளசி செடியில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். சாமந்திப் பூ, தாழம்பூ, தாமரை மலர் கொண்டும் லட்சுமியை அர்ச்சிக்கலாம். வில்வ மரத்தை வலம் வந்து வழிபடுவது லட்சுமியை வலம் வருவதற்குச் சமமாகும்.
 
வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்களின் வடிவம். இப்படிப்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே, லட்சுமியின் சொரூபமாக விளங்குகிறது என்கிறது புராணம்.