வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

செல்வத்தை ஈர்க்கும் சக்தியை பெற செய்யவேண்டிய விளக்கு பூஜை !!

குபேர கடவுளிடம் மட்டுமே செல்வம் குறையாது பெருகிக் கொண்டே இருக்கும். நம்மிடம் இருக்கும் செல்வத்தை குபேர கடவுள் பாதுகாத்து அதனை பல மடங்காக பெருகி கொடுக்கவும் நாம் குபேரருக்கு செய்ய வேண்டிய ஒரு உகந்த வழிபாடுதான் இந்த மகாலஷ்மி குபேர விளக்கு பூஜை வழிபாடு.

குபேரருக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று இந்த விளக்குப் பூஜையை நாம் செய்ய வேண்டும். இந்த விளக்கை ஏற்ற நாம் குபேர விளக்கை பயன்படுத்தவேண்டும். குபேர விளக்கு கிடைக்கவில்லை என்றால் அகல் விளக்கை ஏற்றியும் இந்த பூஜையை பின்பற்றலாம்.
 
குபேர விளக்கை தினமும் பூஜை அறையில் ஏற்றி வரலாம். குபேரருக்கு பூஜை அறையில் வடக்கு திசை நோக்கி ஏற்றவேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமையும்  மாலை 5 லிருந்து 8 மணிக்குள் இந்த விளக்கை ஏற்றினால் அது மிகவும் விசேஷம்.
 
முதலில் குபேர விளக்கிற்கும் குபேர விளக்கு வைக்கும் மனை அல்லது தட்டிற்க்கு ஒற்றைப்படையில் மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். பிறகு குபேர விளக்கு வைக்கும் தட்டில் சிறிதளவு பச்சரிசியை வைக்கவேண்டும்.

பச்சரிசி மகாலக்ஷ்மியின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. குபேரருக்கு விசேஷமான எண் 5.  எனவே ஐந்து ரூபாய் நாணயத்தை பச்சரிசியில் வைக்க வேண்டும்.
 
குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து, குபேர திரியினால் அதாவது பச்சை நிறத்தில் உள்ள திரியால் ஏற்ற சிறந்த பயனளிக்கும். இல்லை எனில் பஞ்சு திரி வைத்தும் விளக்கு ஏற்றலாம். குபேர விளக்கில் ஐந்து கற்கண்டு சேர்த்து, சுற்றி வாசனை மலர்கள் வைக்க வேண்டும்.
 
குபேர விளக்கை ஏற்றிய பின்னர் நம் வீட்டின் நிலை வாசலில் இடதுபுறம் வடக்கு நோக்கி வைக்க வேண்டும். வடக்கு திசை தெரியவில்லை எனில் கிழக்கு  நோக்கியும் ஏற்றலாம்.