1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 2 டிசம்பர் 2023 (12:32 IST)

'வசூலாகும் லஞ்சப் பணம் யாருக்கு எல்லாம் பங்கு போகிறது - கே.பாலகிருஷ்ணன்

K Balakrishnan
திண்டுக்கல்லில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றபோது கைதான நிலையில், ''வசூலாகும் லஞ்சப் பணம் யாருக்கு எல்லாம் பங்கு போகிறது என்பது துருவி விசாரிக்கப்பட வேண்டியதாகும்'' என்று சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திண்டுக்கல்லில் நேற்று காலையில் ரூ.20 லட்சம் பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிடிப்பட்டார். இந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவர் ஒருவரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.3 கோடி கேட்டு அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியுள்ளதாக விசாரணையில் தகவல் வெளியானது.

இந்த நிலையில், மிரட்டி லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை.

15 மணி     நேர விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள அங்கித் திவாரியை  போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இது சம்பந்தமாக நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,

''மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மதுரையில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஏற்கனவே ரூ.31 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி அடுத்த தவணையாக ரூ.20 லட்சம் வாங்கும்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மாட்டிக் கொண்டார். இதுபோல வசூலாகும் லஞ்சப் பணம் யாருக்கு எல்லாம் பங்கு போகிறது என்பது துருவி விசாரிக்கப்பட வேண்டியதாகும்’’என்று தெரிவித்துள்ளார்.