வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 அக்டோபர் 2018 (13:49 IST)

திருமுருகன் காந்தியை சந்தித்த ஸ்டாலின்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு உட்பட 23 வழக்குகள் போடப்பட்டு 55 நாட்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அவர் வேலூர் சிறையில் இருந்த போது அவரது உடல்நிலை சரியில்லாமல் இரண்டு முறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறையில் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதும் சுகாதாரமான உணவு வழங்கப்படாததுமே இதற்குக் காரணமாக சொல்லப்பட்டது.

இதையடுத்து அவர் மீதான வழக்குகளில் இருந்து ஜாமீன் பெறப்பட்டதை அடுத்து அவர் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவந்தார். இதையடுத்து அன்று இரவு அவர் மருத்துவமனையில் சோதனைக்காக சென்றார். அவரை பரிசோதித்த அவரது மருத்துவர்கள் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ளும்படி வலியுறுத்தினர். இதனால் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனியில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் திருமுருகன் காந்தியை பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ மணியரசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் போன்றோர் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று திருமுருகன் காந்தியை பார்த்து நலம் விசாரித்துள்ளார். ஸ்டாலின் திருமுருகன் காந்தியோடு கைகுலுக்கும் படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.