வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ் கியான்
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (14:42 IST)

பாஜகவை எதிர்த்து களம் காண்பாரா ரஜினிகாந்த் ? தமிழக அரசியலில் பரபரப்பு !

அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர்  டிரம்ப் வருவது குறித்து உலக அரசியல் பார்வையாளர்கள் எதிர்ப்பார்க்கிறார்களோ இல்லையோ, ஆனால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தன் அரசியல் வருகையை ரஜினிகாந்த் உறுதி செய்து, தனது ரசிகர்களை உசுப்பேற்றினார். அதனால் தமிழக அரசியல் தலைவர்களுக்கு அவரது அறிவிப்பு சிறிது கலக்கமாகவே பார்க்கப்பட்டது.

அதன் பிறகு தமிழகத்தில் சிஷ்டம் கெட்டுப்போச்சு என ஆளும் கட்சியை வம்பிழுத்தார். அதற்கு வரிந்துகட்டிக்கொண்டு அதிமுகவும் அவரை கடுமையாக விமர்சித்தது. மேலும், கர்நாடகா சென்று காவிரிநதி நீரைக் கொண்டு வந்து தமிழகத்தில் சிஷ்டத்தை சரிசெய்ய வேண்டும் எனவும் ரஜினிக்கு அதிமுக அமைச்சர்கள் பதிலடி கொடுத்தனர்.

அதன்பின்னர், முன்னாள் முதல்வர்களான , ஜெயலலிதா, கருணாநிதியின் மரணத்திற்குப் பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது என பூடகத்தை கிளப்பினார். அதற்கு, திமுகவின் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ரஜினியை கடுமையாக விமர்சித்து அதன் ஆசிரியரால் ஒரு கட்டுரை எழுதப்பட்டது. இதனால் எழுந்த சர்ச்சையை அடுத்து அந்த ஆசிரியர் தன் தவற்றிக்கு நேரிலேயே சென்று ரஜினியிடம் மன்னிப்பு கேட்க, அவரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது ரஜினியின் பெருந்தன்மையை காட்டியது.

இந்தநிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் நடத்திய பேரணியில், துப்பாக்கிச்சூடில் காயமடைந்தவர்களை சந்திக்க சென்ற ரஜினியை ஒருவர், நீங்கள் யார் எனக் கேள்வி கேட்டார். இந்தக் கேள்வி 40 வருட சினிமா நட்சத்திர அந்தஸ்து கொண்ட சூப்பர் ஸ்டாரின் இமேஜையே கேள்விகுறியாக்கியது! மட்டுமல்லாமல்,  இத்துணை வருட காலத்தில் சினிமாவில் ஓங்கிய ரஜினி ஒரு சில போராட்டங்களைத் தவிர மக்களின் பொதுப்பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்காத நிலையையே இது காட்டியதாக அப்போது அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, 7 பேரின் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ரஜினி தெரியாமல் விழித்த தருணம் அவரது, அரசியல் குறித்த பார்வை மற்றும் , தமிழகத்திலுள்ள தீவிர நிலவரத்தில், தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு ஆட்சியைப் பிடிக்கப்போவதாகக் கூறும்  அவர் கவனம் செலுத்துவதில்லையோ என அவரைக் குறித்து பலரும் விமர்சித்தனர்.

அதன்பின்னர், தனது ஆதரவை காவிரி - கோதாவரி நதி இணைப்புத் திட்டத்தினை செயல்படுத்தப்போவதாக அறிவிப்பை வெளியிட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையை மிகவும் பாராட்டியதுடன், பாஜகவின் தலைமையான பிரதமர் மோடியை புகழ்ந்து, எல்லோரும் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள்.. அதனால் அந்த ஒருவர் மோடிதான் சிறந்தவர் என தன் வாயால் தேர்தல் பாஜவுக்கு தேர்தல் பிரச்சாரத்தை பற்ற வைத்தார். இது பாஜகவினருக்கு குதூகலாமாக அமைந்தது. அதையடுத்து நடந்த தேர்தலில் பாஜகவுக்கு, தமிழகத்தில்  ஒரு இடத்தில் கூட வெற்றிகிடைக்கவில்லை.

தமிழிசைக்கு, பாஜக தலைமை தெலுங்கானா மாநில கவர்னர் பதவியை அளித்துக் கவுரவித்தபோது, தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் ரஜினிதான் என சில வதந்தியாளர்கள் அரசியல் குட்டையைக் குழப்பிய தருணத்தில், திமுக விஜய்யுடன் பேசிக்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியானது.

பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பதற்கு பாஜவினர் கூறுவதற்கு முன்னரே தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் இந்நாள் எம்பி திருநாவுக்கரசு, ரஜினி யார் தலைமையின் கீழும் பணியாற்ற மாட்டார் ; அவர் பாஜகவின் உறுப்பினரே இல்லை. பிறகெப்படி அவர் அக்கட்சியின் தலைவர் ஆக முடியும் என குழப்பத்திற்கு முடிவு கட்டினார். ஆனால் ரஜினி பாஜவிற்கு வந்தால் ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராக இருப்பதாகவே பாஜக தலைவரின் செயல்களும் இருந்தன.

இந்தநிலையில், இன்று ரஜினி,பாஜக தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து குறித்து ஒரு  ஒரு பேட்டியளித்துள்ளார்.

சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதுதான் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். ஆதலால் மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் இந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது இந்தி மொழியால் மட்டுமே முடியும் என தெரிவித்திருந்தார்.  இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றனர்.

 அமித் ஷாவின் ஒரே நாடு,ஒரே மொழி, குறித்த பதிவுக்கு, இன்று விமான நிலையத்தில் ரஜினி கூறியதாவது :எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு அது நல்லது. ஆனால், துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழியை கொண்டு வர முடியாது. அதேபோல் இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்க கூடாது. இந்தி மொழியை திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தி திணிப்பை தமிழகம் மட்டுமல்ல தென் இந்தியாவில் எந்த மாநிலமும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ளார்.

ரஜினியின் இந்த பதிலில்  ஒரு மழுப்பலான விஷயம் அடங்கியுள்ளது, தனது கருத்தை பாஜகவுக்கு எதிரானதாகவும் இல்லாமல், தமிழக எதிர்க்கட்சிகளைப் போன்று ஆணித்தரமாக ஹிந்தி மொழி வேண்டாம் எனவும் குறிப்பிடாமல் மக்கள் மேல் பழியைப் போட்டுள்ளார்( இதில் ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளலாம் என்ற தொனியும் உள்ளதாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது). அவரது அரசியல் வருகையில் யாரையும் குறிப்பாக ஆளுங்கட்சியை எதிர்க்கூடாது என்ற நிலை ஓங்கியுள்ளதையே  காட்டுகிறது. இதற்கு மேலாக அவரது சினிமா வியாபாரம். இருப்பினும், ஹிந்தியைத் திணிக்கக்கூடாது என்று  ரஜினி கூறியது மத்திய அமைச்சர் அமித் ஷாவின் காதுக்குள் உரைத்தால் சரி என்பதுதான் தமிழகத்தின் கோரஷ் குரலாக உள்ளது.