1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (19:10 IST)

பேனர் வைத்தவரை விட்டுவிட்டு போஸ்டர் ஒட்டியவரை கைது செய்வதா? விஜய் ரசிகர்கள் அதிருப்தி

சமீபத்தில் சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் வைத்ததால் பலியான நிலையில் இன்னும் அந்த பேனர் வைத்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்யாத நிலையில் பிறந்த நாள் வாழ்த்து கூறி போஸ்டர் ஒட்டியவரை போலீஸார் கைது செய்துள்ளதாக மதுரை விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் தங்கபாண்டியனின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ரசிகர் மன்ற சார்பில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் உரிய அனுமதியின்றி ஒட்டப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இதனையடுத்து விஜய் ரசிகர் மன்ற பொருளாளர் சதீஷ்குமார் மற்றும் மேலும் இருவரின் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த மூவரில் விஜய் ரசிகரான ஜெயகார்த்திக் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் அதிமுக பிரமுகர் ஒருவர் வைத்த பேனரால் ஒரு உயிரே போயுள்ளது. அவரை கைது செய்யாமல் விஜய் ரசிகர்களாகிய நாங்கள் எங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளை காட்ட போஸ்டர் ஒட்டியதற்காக போலீஸார் கைது செய்கின்றனர். நாங்கள் ஒட்டிய போஸ்டரால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. யாரும் இதுகுறித்து புகார் அளிக்கவும் இல்லை. இந்த நிலையில் போலீசார் கைது செய்தது உள்நோக்கம் கொண்டதாக இருப்பதாக மதுரை விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
 
பிறந்த நாள் வாழ்த்து போஸ்டரில் ‘தளபதியின் அறிவாலயமே’ என்ற வாசகமே போலீசார் நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்திருக்கும் என்று அந்த பகுதியினர் தெரிவித்து வருகின்றனர்.