வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (12:12 IST)

விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் – ஆனால் சின்னம் உதயசூரியன் ?

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்குவதாக திமுக சார்பில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது.

திமுக தலைமையிலானக் கூட்டணியில் காங்கிரஸும் இடம்பெறும் என்பது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு ராகுல் காந்தி வந்தபோதே முடிவாயிற்று. அதன் பின் திமுக கூட்டணியில் வேறு சிலக் கட்சிகளும் இணைய ஆரம்பித்தன. இடையில் பாமக வை இழுக்க திமுக முயன்ற போது கூட்டணிக்குள்ளும் ஊடகங்களிடம் ‘ பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க இயலாது’ என விசிக தலைவர் திருமாவளவன் வெளிப்படையாகவே அறிவித்தார்.

இதையடுத்து தேமுதிக திமுக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு இருந்ததால் அவர்களுக்கான தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்த பின்னர் விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசலாம் என நினைத்தது. ஆனால் தேமுதிக அதிமுக பக்கம் கரையொதுங்க ஆரம்பித்தால் திமுக பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டது.

அதையடுத்து இப்போது கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டில் மும்முரம் காட்டி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியுள்ள நிலையில் இன்று திருமா வளவனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்கள் என அறிவித்துள்ளது.

2 தொகுதிகள் ஒதுக்கினாலும் விசிக உதயசூரியன் சின்னத்திலேயேப் போட்டியிட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் திமுக வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள். வெற்றி பெற்றால் 5 வருடங்களுக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் மீதான் ஆதவை திரும்பப் பெற இயலாது. அப்படிக் கட்சி மாறினால் அவர்கள் பதவி இழக்க நேரிடும். அதனால் இந்த நிபந்தனைக்கு மட்டும் எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வருகிறதாம் விசிக.

விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 தொகுதிகளில் சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமா வளவனும் திருவள்ளூர் தொகுதியில் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.