வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 மார்ச் 2018 (14:02 IST)

கவிதை பேசும் வைரமுத்து ; கண்களால் பேசும் கலைஞர் : வைரல் வீடியோ

திமுக தலைவர் கருணாநிதியிடம் கவிஞர் வைரமுத்து கவிதை கூற, அதற்கு கருணாநிதி காட்டும் முக பாவணைகள் கொண்ட வீடியோவை வைரமுத்து வெளியிட்டுள்ளார்.

 
வயோதிகம்  மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கலைஞர் கருணாநிதி தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதோடு, முழு ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், கருணாநிதியின் மனதுக்கு மிகவும் நெருக்கமான கவிஞர் வைரமுத்து ‘ பிடர் கொண்ட சிங்கமே பேசு’ என்கிற தலைப்பில் கருணாநிதி குறித்து ஒரு கவிதை எழுதியுள்ளார்.
 
அந்தக் கவிதையை அவர் கருணாநிதியிடம் வாசித்துக் காட்ட, அதற்கு அவர் காட்டும் முகபாவனைகள் கொண்ட வீடியோவை வைரமுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ திமுக விசுவாசிகள் மற்றும் தொண்டர்களுக்கிடையே வைரலாக பரவி வருகிறது.
 
வைரமுத்து எழுதியுள்ள கவிதையாவது :
 
பிடர்கொண்ட சிங்கமே, பேசு
இடர்கொண்ட தமிழர் நாட்டின்,
இன்னல்கள் தீருதற்கும்.
 
படர்கின்ற பழைமை வாதம், 
பசையற்று போவதற்கும்..
சுடர்கொண்ட தமிழைக்கொண்டு ,
சூள் கொண்ட கருத்துரைக்கப்
பிடர்கொண்ட சிங்கமே, நீ 
பேசுவாய் வாய்திறந்து..
 
யாதொன்றும் கேட்கமாட்டேன்,
யாழிசை கேட்கமாட்டேன்.
வேதங்கள் கேட்கமாட்டேன்
வேய்ங்குழல் கேட்கமாட்டேன்..
 
தீதொன்று தமிழுக்கென்றால்
தீக்கனல் போலெழும்பும்
கோதற்ற கலைஞரே நின்
குரல் மட்டும் கேட்க வேண்டும்
 
இடர்கொண்ட தமிழர் நாட்டின்,
இன்னல்கள் தீருதற்கும்.
படர்கின்ற பழைமை வாதம்,
பசையற்று போவதற்கும்..
 
சுடர்கொண்ட தமிழைக்கொண்டு , 
சூள் கொண்ட கருத்துரைக்கப்
பிடர்கொண்ட சிங்கமே, நீ 
பேசுவாய் வாய்திறந்து!