1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 10 மே 2018 (17:18 IST)

நெடுவாசல் வெற்றிக்கு மக்கள் போராட்டமே காரணம்: வைகோ

தமிழகத்தில் உள்ள விவசாய பகுதிகளில் ஒன்றான நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர். திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கொடுத்த தொடர்ச்சியான எதிர்ப்பு காரணமாக
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட்டுள்ளது.




இது மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சிகளின் தலையீடு இன்றி நெடுவால் மற்றும் 70 கிராமங்களின் மக்கள் தன்னெழுச்சியாகப் போராடினார்கள். மத்திய அமைச்சர்கள் திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்று கூறியபோதிலும், மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஜெம் லேபரெட்டரி நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தது. புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் வடகாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மதிமுக ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தார்.




நானே தீர்ப்பாயத்தில் வாதாடினேன். ஜெம் லேபரெட்டரி நிறுவனம் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில், ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும், எனவே எரிவாயு எடுப்பதை யாரும் தடுக்க முடியாது என்று திமிரோடு கூறியது. தற்போது ஜெம் நிறுவனம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிடப் போவதாகவும், மாற்று இடம் கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயுத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்றும் நெடுவாசல் வெற்றிக்கு மக்கள் போராட்டமே காரணம் ஆகும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.