மாநிலங்களவை எம்பி ஆனார் கமல்ஹாசன்.. தமிழில் பதவியேற்பு..!
உலகநாயகன் கமல்ஹாசன், சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்கும் வகையில், அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
கமல்ஹாசனுடன், தி.மு.க. எம்.பி.க்களான வில்சன், சல்மா மற்றும் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும் இன்று பாராளுமன்றத்தில் தமிழில் பதவி ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய இருவரும் வரும் திங்கட்கிழமை மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்க இருப்பதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, நேற்றுடன் பதவிக்காலம் நிறைவடைந்த தி.மு.க.வை சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, வில்சன்; அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரசேகரன்; பா.ம.க.வை சேர்ந்த அன்புமணி ராமதாஸ்; மற்றும் ம.தி.மு.க.வை சேர்ந்த வைகோ ஆகிய ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த ஆறு பேரில், தி.மு.க.வை சேர்ந்த வில்சன் மட்டுமே மீண்டும் எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran