1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (13:38 IST)

அரசியலில் நேற்று முளைத்த காளான் உதயநிதி! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

Udhayanithi Jayakumar
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நிர்மலா சீதாராமன் குறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய விதம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது பேச்சுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.



தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவது, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிப்பது குறித்து சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “உங்க அப்பன் வீட்டு காசையா கேட்டோம்?” என பேசியது அங்கேயே பத்திரிக்கையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு அவர் “நான் வேண்டுமென்றால் மரியாதைக்குரிய தங்கள் தந்தையின் என்று சொல்கிறேன். திருத்தி கொள்கிறேன்” என கூறியிருந்தார்.

அவர் அவ்வாறு பேசியதற்கு பாஜக பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உதயநிதியின் இந்த பேச்சு குறித்து கண்டனம் தெரிவித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் “உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் நாகரீகம் வேண்டும். நேற்று முளைத்த காளான் திரு.உதயநிதிக்கு வாய் துடுக்கு அதிகம் என்பதால் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவது சரியல்ல. பொருப்பாக கருத்துகளை சொல்ல வேண்டும். உதயநிதி ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி” என விமர்சித்துள்ளார்.

Edit by Prasanth.K