திங்கள், 16 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2020 (09:11 IST)

தொடர் கைது, போலீஸ் மிரட்டல்... இருப்பினும் அசராமல் பயணிக்கும் உதயநிதி!

தொடர் கைது, போலீஸ் மிரட்டல்... இருப்பினும் அசராமல் பயணிக்கும் உதயநிதி!
பரப்புரையின் போது கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் 7 மணி நேரத்திற்குப் பிறகு விடுவிப்பு. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையிலிருந்து 100 நாட்கள் தொடர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். 
 
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி நேற்று மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் பிரச்சாரம் செய்ய முயன்ற உதயநிதி ஸ்டாலினை போலீஸார் மீண்டும் கைது செய்தனர். 
தொடர் கைது, போலீஸ் மிரட்டல்... இருப்பினும் அசராமல் பயணிக்கும் உதயநிதி!
இது குறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் பிரச்சார பயணத்தை தடுத்து மதியம் 2 மணிக்கு கைது செய்தவர்கள், இரவு 11 வரை விடவில்லை. அதிரடிப்படை- ஆயுதம் ஏந்திய போலீஸ் என மிரட்டிப்பார்த்தனர். எனினும், நம் கழகத்தினரின் கொந்தளிப்பை சமாளிக்க முடியாமல் தற்போது விடுவித்துள்ளனர். எனது பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன் என பதவிட்டுள்ளார். 
 
மேலும் கைது செய்யப்பட்டபோது, காவல்துறைக்கு என்னை ரொம்ப பிடிக்கிறது. குத்தாலத்தில் கைது செய்துள்ளனர். ஒரு உதயநிதியை கைது செய்தால் கழகத்தை நோக்கி மக்கள் வருவதை தடுக்கலாமென எண்ணும் அடிமைகளை நினைத்தால் சிரிப்பே வருகிறது. அடுத்து புறப்படும் தலைவர் ஸ்டாலினின் போர்ப்படையை எப்படி தடுப்பார் எடுபுடிஜி என கேள்வி எழுப்பியுள்ளார்.