1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (09:54 IST)

காதலிப்பதாக ஏமாற்றி சிறுமி பலாத்காரம்: காதலன் உட்பட இருவர் கைது!

தூத்துக்குடி அருகே காதலிப்பதாக கூறி 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி அருகே உடன்குடியை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள செல்போன் கடை ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கும் திருச்செந்தூரில் ஓட்டலில் வேலை பார்த்து வரும் அய்யப்பன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை காதலிப்பதாக அய்யப்பன் கூறியுள்ளார்.

சிறுமியின் தாயார் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக செல்வதாக தன் தந்தையிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார் சிறுமி. திருப்பூர் சென்ற சிறுமியுடன் அய்யப்பனும் சென்றிருக்கிறார். திரும்ப வரும்போது சிறுமியை திருச்செந்தூர் அழைத்து சென்ற அய்யப்பன் அங்கு ஒரு அறையில் தங்க வைத்து தனது நண்பன் மணிகண்டன் என்பவருடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் சிறுமியை அடித்து உதைத்தும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தியுள்ளனர். இதனால் மயங்கி விழுந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலைக்கு ஆளாகியுள்ளார். அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி அவரது வீட்டுக்கு முன்பாக இறக்கி விட்டுவிட்டு அய்யப்பன் தப்பியுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அய்யப்பன் மற்றும் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் மேற்கண்ட சம்பவங்கள் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் உடன்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.