1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 மே 2019 (08:53 IST)

ஆட்சியை கலைக்க என்ன வேணா பண்ணுவோம்...? பக்கா பிளானோடு டிடிவி!!

அதிமுக ஆட்சியை கலைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை கண்டிப்பாக செய்வோம் என டிடிவி தினகரன் பேசியுள்ளார். 
 
அமமுக அலுவலகத்தில் பணம் கைப்பற்றப்பட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் வழக்கறிஞர் செல்வத்தைக் காண தேனி சிறைக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். 
 
அப்போது அவர் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவர 35 எம்.எல்.ஏக்கள் தேவை. 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம். ஆனால் திமுகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கமாட்டோம் என தெரிவித்திருந்தார். 
இதற்கு நேற்று எடப்பாடி பழனிச்சாமி, திமுக - அமமுக கூட்டு வைத்து செயல்படுவது, தங்க தமிழ்ச்செல்வன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அதிமுக ஆட்சியை கவிழ்க்க இரண்டு பேரும் சேர்ந்தது திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் எங்கள் ஆட்சியை கவிழ்க்க முடியாது என பதிலடி கொடுத்தார். 
 
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் சொன்னது சரியான கருத்துதான். அவர் யதார்த்தத்தை பேசி இருக்கிறார். இதில் எந்த தவறும் கிடையாது. 
அதிமுக ஆட்சி கலைய போவது உண்மைதான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. நாங்கள் ஆட்சி கலைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை கண்டிப்பாக செய்வோம் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 
 
ஆனால், இது குறித்து திமுக தரப்பில் எந்தவிதமான மறுப்போ அல்லது கருத்தோ தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.