வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 3 அக்டோபர் 2019 (18:06 IST)

நகை திருடு போன லலிதா ஜுவல்லரிக்கு விரைந்த திருநாவுக்கரசர்: காரணம் என்ன?

திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த நகை கொள்ளை சம்பவம் குறித்து நேரில் சென்று விசாரித்து வந்துள்ளார் எம்பி திருநாவுக்கரசர். 

 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே, உள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியின் கிளையில், ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் யாராக இருக்கும் என போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 
 
காவல் துறையினர் ஆய்வு நடத்தியதில், கடையின் பின்புறமுள்ள புனித ஜோசப் பள்ளிக்கும் கடைக்கும் இடையே ஒரே சுவர் என்பதால் பள்ளியின் வழியே பக்கவாட்டு சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு துளையிட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். 
இரவுப் பணியில் இருந்த 6 காவலாளிகளும் கடையின் முன்பக்கம் இருந்ததால் அவர்களுக்கு கடையின் பின்புற என்ன நடக்கிறது என்பது தெரிய வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. மிகவும் கேஸ்வலாக பொம்மை முகமூடி அணிந்து 2 பேர் கடைக்குள் புகுந்து கொள்ளை அடித்திருப்பது தெரியவந்தது. 
 
இந்நிலையில், தனது தொகுதியில் இப்படி ஒரு கொள்ளை சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். 
 
கொள்ளை நடந்தது பற்றியும், கொள்ளைபோன நகைகள் மற்றும் அதன் மதிப்பீடுகள் பற்றியும் திருச்சி லலிதா ஜுவல்லரி மேலாளர் திருநாவுக்கரசரிடம் விளக்கியுள்ளனர். மேலும், போலீஸார் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் உயரதிகாரிகளிடம் கேட்டறிந்துக்கொண்டு வந்துள்ளார்.