1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (08:40 IST)

கடைத்தெருவில் வெடித்த ஹீலியம் சிலிண்டர்; உடல் சிதறிய ரவுடி! – திருச்சியில் பெரும் அசம்பாவிதம்!

Trichy
திருச்சியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து பலர் உயிருக்கு போராடி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் பொருட்கள் வாங்க அதிகளவில் கடைத்தெரு பகுதிகளில் குவிந்து வருகின்றனர். திருச்சி சிங்காரத்தோப்பிலும் மக்கள் கூட்டம் நிறைய இருந்த நிலையில் அங்கு ஹீலியம் கேஸ் நிரப்பி பலூன் விற்கும் நபர் ஒருவரும் துணிக்கடை முன்பு பலூன்களை விற்று வந்துள்ளார்.

அப்போது திடீரென ஹீலியம் சிலிண்டர் வெடித்தது. இதனால் அருகே இருந்த ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. அருகே இருந்த துணிக்கடையின் மூன்றாவது தளம் வரை இருந்த கண்ணாடி சுவர்கள் உடைந்துள்ளன. மக்கள் பலர் சிலிண்டர் வெடித்த வேகத்தில் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் மாட்டுரவி என்ற சின்ன தாராபுரத்தை சேர்ந்த ரவுடி சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியானார். 13 வயது மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். மேலும் 21 பேர் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹீலியம் பலூன் விற்ற வடமாநில இளைஞரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், திருச்சியில் ஹீலியம் பலூன்கள் விற்க தடை உள்ளதாகவும், அதை மீறி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Edited By; Prasanth.K