1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (12:16 IST)

வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்..! எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்.!!

edapadi
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த நூற்றுக்கணக்கான கடைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.
 
பல ஆண்டுகளாக அக்கடைகளை நம்பிதான் தங்கள் வாழ்வாதாரமே உள்ளதாகவும், எனவே தாங்கள் தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கு வசதியாக மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும், மாற்று இடம் வழங்கப்படும் வரை தொடர்ந்து அந்த இடத்திலேயே வியாபாரம் செய்ய வியாபாரிகள் வைத்த கோரிக்கையினை ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

 
வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் வரை உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டுமென்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.