1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (06:30 IST)

மத்திய அமைச்சரை திடீரென சந்தித்த 'தங்கமணி-வேலுமணி! அதிமுகவில் பரபரப்பு

மக்களவை தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று ஒருசில எம்.எல்.ஏக்கள் குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர். இந்த குரலுக்கு மேலும் சில எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஆதரவு தெரிவித்து வருவதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 13ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முக்கிய கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஒற்றைத்தலைமை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது
 
இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் நேற்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை டெல்லியில் சந்தித்து பேசினர். இவர்தான் கடந்த மக்களவை தேர்தலின்போது தமிழக பாஜகவுக்கு தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர் என்பதும், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை இறுதி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தேர்தல் முடிவுக்கு பின் ஒருபக்கம் அதிமுக அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் திடீரென தங்கமணி, வேலுமணி ஆகிய இரு அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை  சந்தித்து இருப்பதால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆனால் தமிழகத்திற்கு தேவையான ரயில்வே திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களிடம் ஆலோசனை செய்ததாக அமைச்சர் தங்கமணி, அமைச்சர் வேலுமணி ஆகியோர்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது