1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (17:30 IST)

கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வர தடை: தமிழக அரசின் அதிரடி உத்தரவு

நாளை மறுதினம் முதல் கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்படுகிறது என்றும், பழம் மற்றும் பூ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுகிறது என்றும் மொத்த வியாபாரம் மட்டும் கோயம்பேட்டில் நடைபெறும் என்றும் சில்லரை விற்பனையை பல்வேறு மாநகராட்சி மைதானங்களில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மற்றும்‌ மாண்புமிகு துணை முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில்‌ கொரோனா நோய்‌ தடுப்பு மற்றும்‌ சமூகபரவலை தடுப்பதற்காக கீழ்காணும்‌ நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படுகிறது.
 
1. கோயம்பேடு மார்க்கெட்டில்‌ காய்கறிகள்‌, பழங்கள்‌, பூக்கள்‌ உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள்‌ நேரடியாக வர தடைச்செய்யப்‌பட்டுள்ளது. 
 
2. கோயம்பேடு வணிக வளாகத்தில்‌ தற்பொழுது நடைபெற்று வரும்‌ சில்லறை விற்பனை முழுவதுமாக தடைச்செய்யப்படுகிறது.
 
3. சென்னை பெருநகர மாகராட்சி மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அந்தந்த பகுதிகளில்‌ உள்ள திறந்தவெளி மைதானம்‌ மற்றும்‌ பேருந்து நிலையத்தில்‌ காய்கறிகள்‌, பழங்கள்‌ விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
4.  கோயம்பெடு மார்க்கெட்டில்‌ இயங்கி வந்த பூ மார்க்கெட்‌ மற்றும்‌ பழங்கள்‌ அங்காடி வியாழன்‌ முதல்‌ மாதவரம்‌ பேருந்து நிலையத்தில்‌ மறு அறிவிப்பு வரும்‌ வரை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
5. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள்‌ மற்றும்‌ உணவு தாணியங்கள்‌ ஏற்றிவரும்‌ வெளி மாநில வாகனங்கள்‌ மற்றும்‌ வெளிமாவட்ட வாகனங்கள்‌ மாலை 6.00 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரை பொருட்களை இறக்கி வைத்தபின்‌ வெளியேற்றப்படும்‌.
 
6. அதிகாலை முதல்‌ 7.30 மணி வரை வியாபாரிகள்‌ சில்லறை விற்பனைக்கு காய்கறிகள்‌ வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
7. காய்கறி அங்காடிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அட்டவணையானது கோயம்பேடு உணவுதாணிய அங்காடிக்கும்‌ பொருந்தும்‌.
 
8. தற்பொழுது சென்னைப்‌ பெருநகர்‌ வளர்ச்சிக்‌ குழுமத்தால்‌ லாரிகள்‌ மற்றும்‌ வீட்டு வினியோக நிறுவனங்கள்‌ மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ காய்கறி வினியோகமானது தொடர்ந்து நடைபெறும்‌.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.