வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 17 மே 2019 (15:35 IST)

கணவன், குழந்தையை கொன்று புதைத்த பெண்! திடுக்கிடும் சம்பவம்

வேலூர் அருகே இளம்பெண் ஒருவர்  கணவனையும், குழந்தையையும் கொன்று  புதைத்து விட்டு காணவில்லை என  நாடகமாடியது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது. 
வேலூர் மாவட்டத்தில் தாஜ்புரா  மந்தைவெளியை சேர்ந்தவர் தீபிகா. இவர்  அதே பகுதியில் உள்ள வேறு சமுதாயத்தை  சேர்ந்தவரான ராஜா என்கிற இளைஞரை  காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் 2  ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு  வயதில் ப்ரனீஸ் என்ற குழந்தையும் உள்ளது.
 
இந்நிலையில் கடந்த 13ம் தேதி வெளியே  சென்ற தனது கணவரையும், குழந்தையையும்  காணவில்லையென காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த  போலீஸார் தீபிகாவிடம் இருந்து  விசாரணையை தொடங்கியுள்ளனர். அவரது  செல்போன் எண்னை ட்ராக் செய்து அவரை  கண்டுபிடிக்கலாம் என்று போலீஸ்  தெரிவித்தபோது, அவர் செல்போனை  வீட்டிலேயே வைத்துவிட்டு போய்விட்டதாக  தீபிகா கூறியுள்ளார். போலீஸார் தொடர்ந்து  விசாரிக்கையில் முன்னுக்கு பின் முரணாக  பதில் கூறியிருக்கிறார். இதில் சந்தேகமடைந்த  போலீஸார் தீவிரமாக விசாரணை  மேற்கொண்டதில் தனது கணவரையும்,  குழந்தையையும் தானே கொன்று புதைத்து  விட்டதாக தீபிகா ஒப்புக்கொண்டுள்ளார்.
 
காதலித்து திருமணம் செய்து கொண்டாலும்  தன் கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து  தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும்  அதனால் அவரை கொலை  செய்துவிட்டதாகவும் தீபிகா தெரிவித்துள்ளார்.  
 
மேலும் ஒரு கொலைகாரியின் குழந்தை என  கூறிவிடுவார்களே என்பதால் தன்  குழந்தையையும் கொலை செய்ததாக  கூறியுள்ளார். அவர்களை புதைத்த இடத்தில்  போலீஸார் தோண்டி தேட தொடங்கியுள்ளனர்.  மேலும் தீபிகா தனியாளாக இந்த கொலையை  செய்து கொண்டு வந்து புதைத்திருக்கமுடியாது.  எனவே அவருக்கு யாராவது உதவியிருக்கூடும்  என்ற ரீதியிலும் போலீஸார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த படுபாதக கொலை சம்பவம் அப்பகுதி  மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.