1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 12 மே 2024 (15:44 IST)

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..! போலீசார் அதிரடி நடவடிக்கை.!!

சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
பெண் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த  சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் தேனி போலீஸார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸார் சீல் வைத்தனர். அவர் வீட்டில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 
 
மொத்தம் 7 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை  மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்  உத்தரவிட்டுள்ளார். குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்களை கோவை சிறை அதிகாரிகளிடம் சென்னை காவல்துறையினர் வழங்கினர்.


இதுகுறித்த சென்னை காவல்துறையின் செய்திக் குறிப்பில், சவுக்கு  சங்கர் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 3 வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 வழக்குகள் விசாரணைக்கான நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.