1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 18 ஏப்ரல் 2024 (12:32 IST)

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்..! தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு..!!

highcourt
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்ட போது நெல்லை பாஜக வேட்பாளர் நயினார்  நாகேந்திரனின் கார் ஓட்டுநர் சதீஷ் மற்றும் உதவியாளர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணம் தொடர்பாக விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
 
இதனிடையே ரூ.4 கோடி பணம் சிக்கிய விவகாரத்தில் தொடர்புடைய நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ரூ.4 கோடி பணம் பறிமுதல் தொடர்பாக குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

 
இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்,  சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைத்து உத்தரவிட்டது.