வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2024 (09:28 IST)

தொடரும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல்!

இலங்கை கடற்கொள்ளையர்கள் சில நாட்களுக்கு முன்னதாக தமிழக மீனவர்களை தாக்கிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்கும் தொழிலை பிரதானமாக நம்பி இருந்து வரும் நிலையில், மீன்பிடிக்க செல்பவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் தாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சில நாட்களில் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் கும்பல், சுமார் 2 லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை கொள்ளையடித்து சென்றனர்.

 

அந்த அதிர்ச்சி மறைவதற்கு தற்போது மீண்டும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. வேதாரண்யம் ஆற்காட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் நேற்று மாலை கோடியக்கரை அருகே கடல்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது 4 படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதுடன், 700 கிலோ மீன்பிடி வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன், தங்க செயின் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 

கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த நான்கு மீனவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடற்கொள்ளையர்கள் தாக்குதல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள மீனவர்கள், தங்களுக்கு இந்த பிரச்சினையில் அரசு சரியான நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Edit by Prasanth.K