1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 25 ஜூன் 2021 (10:26 IST)

கோவில்களில் குற்றம் நடந்தால் புகார் அளிக்க உதவி எண்! – அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் குற்றம் நடந்தால் புகார் அளிப்பதற்கான கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்துள்ளார்.
கோப்புப்படம்

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக இந்து அறநிலையத்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்தல், அனைவருக்கும் அர்ச்சகர் பயிற்சி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது திருக்கோவில்களில் குற்றங்கள் நடந்தாலோ, புகார்கள் இருந்தாலோ பொதுமக்கள் தெரிவிப்பதற்கான குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்துள்ளார். 044-2833999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.