வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 5 நவம்பர் 2020 (17:13 IST)

30 சதவீதம் போனஸ்… வேலை நேரத்தில் மாற்றம் – டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு?

தமிழகத்தில் அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனர். அந்த மனுவில் ‘கடந்த 27 ஆண்டுகளாக டாஸ்மாக் துறையில் குறைந்த தொகுப்பூதியத்தில் 27 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அரசின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு கரோனா நோய்த் தொற்று காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகிறோம்.

ஆனால், உயர்ந்து வரும் விலைவாசியால் குறைந்த தொகுப்பூதியத்தைக் கொண்டு குடும்பச் செலவினங்களை மேற்கொள்ள முடியவில்லை. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், 20 சதவீதம் போனஸ் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், நிகழாண்டு 10 சதவீதம் மட்டுமே போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த டாஸ்மாக் பணியாளர்களுக்கும் மிகவும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. எனவே, டாஸ்மாக் பணியாளர்களுக்கு வரையறைகளைத் தளர்த்தி 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளின் வேலை நேரம் காலை 10 முதல் இரவு 8 மணி வரை செயல்படுத்தப்பட்ட காலத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் வழிப்பறி உட்பட சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் குறைந்திருந்தன. எனவே, டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளின் வேலை நேரத்தை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.