1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (15:37 IST)

ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டாம்! இதை செய்யுங்க! – அதிகாரியின் உத்தரவு

குழந்தை சுஜித் இறப்பின் காரணமாக ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என தமிழகம் முழுவதும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வரும் சூழலில், அதைவிட அவற்றை சரியான வழியில் பயன்படுத்த ஒரு திட்டத்தை முன்வைத்திருக்கிறார் குடிநீர் வடிகால் வாரிய ஆணையர்.

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க ஆழ்துளை கிணறுகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அளவில் பலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள ஆணையர் மகேஸ்வரன் தமிழகம் முழுவதும் மூடாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்க வேண்டும் எனவும், அவற்றை ஒரேயடியாக மூடிவிடாமல் மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த பணிகளை சரிவர செய்யாத அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றுவது நல்ல காரியம்தான் என்றாலும் தொடர்ந்து அவை பராமரிக்கப்படுமா? மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிடாமல் இருக்கும் என உறுதியாக சொல்லமுடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் இந்த திட்டத்தை சிலர் வரவேற்றும் வருகின்றனர்.