1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 22 ஜூலை 2020 (09:19 IST)

பக்ரீத் கொண்டாடவாவது பள்ளிவாசல் திறப்பாங்களா? – இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பு!

இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜானின் போது மசூதிகள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது பக்ரீத் பண்டிகைக்கு மசூதிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் முதலாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜானின்போது மசூதிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் மசூதிகளை திறக்க வாய்ப்பில்லை என்றும் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே தொழுகையை நடத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது இஸ்லாமிய பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட உள்ளது. ஆகஸ்டு 1ம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி சலாலுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பில் உள்ளது. அது மேலும் நீட்டிக்கப்படுமா என்பது உறுதியாக தெரியாத நிலையில், பக்ரீத் பண்டிகைக்காக மசூதிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் இஸ்லாமியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.