1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (21:11 IST)

இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வர் -கமல்ஹாசன்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு மாணவர்களுக்கு அளிக்கும் திட்டம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் மற்ற பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர்.

இதுபற்றி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’இந்திய மாநிலங்களிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதனால் வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியும்.

இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரம்பரிய நெல் ரகங்களையும்,  ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களையும், நாட்டு ரக பழவர்க்கங்களையும் சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இத்திட்டத்தில் பயன்படுத்தினால் மாணவர்களுக்குச் சத்தான சுவையான உணவும் கிடைக்கும். விவசாயிகளின் நலன்களும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகளும், தானியங்களும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறவும் வாய்ப்புண்டு. இதன் சாத்தியங்களையும் தமிழக அரசு ஆராய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளர்.